“என்னிடம் ஷங்கர் வருத்தப்பட்டார்” - ‘இந்தியன் 2’ படமும் பிடிக்கும் என கமல் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “இப்படி பண்ணிட்டீங்களே சார் என என்னிடம் ஷங்கர் வருத்தப்பட்டார். ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ இது இரண்டும் எனக்குப் பிடித்த படங்கள்தான்” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல், “நான் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க காரணமே ‘இந்தியன் 3’ படத்தின் கதை தான். அதற்காக தான் காத்திருக்கிறேன்” என பேசினார். இதன் மூலம் கமலுக்கு இந்தியன் 2 படத்தில் பெரிய அளவில் நாட்டமில்லை என நெட்டிசன்கள் பேசி வந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், “6 வருடங்கள் இயக்குநரிடம் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வேலை செய்துகொண்டிருந்தேன். ஆனால் ஒரே பிரஸ் மீட்டில் என்னை ஷங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே’ என்று வருத்தப்படும் அளவுக்கு ஆகிவிட்டது. குழந்தைகளிடம் உங்களுக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா என்ற கேள்வியை கேட்க கூடாது. இரண்டு பேரும் இல்லை என்றால் குழந்தையே கிடையாது.

‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ இது இரண்டும் எனக்கு பிடித்த படம்தான். இதில் ஒரு காட்சி எனக்குப் பிடித்தது என சொன்னால், உடனே மற்ற காட்சிகள் பிடிக்கவில்லை என்று நீங்கள் எடுத்துகொள்ள முடியாது. படம் நன்றாக வந்துள்ளது. என்னுடைய ஆர்வம் என்னவென்றால், 2-ம் பாகத்துக்கான ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. என்னுடைய மனம் முழுக்க ‘இந்தியன் 3’ படத்தின் ரிலீஸ் தேதியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. அதை நீங்கள் யாரும் தடுக்க முடியாது. இயக்குநரே கூட அதை தடுக்க முடியாது.

சாம்பார் சாதம் பிரமாதமாக இருந்தது. ரசமும் நன்றாகத்தான் இருந்தது. அடுத்து பாயாசத்தை நோக்கி என்னுடைய மனம் பாய்கிறது என்றால் அதற்கு நீங்கள் என்னை கோபித்துக் கொள்ளக்கூடாது. இது தான் உண்மை. இதனை நான் ‘இந்தியன் 3’ ப்ரஸ்மீட்டாக ஆக்க விரும்பவில்லை. எனக்கு பிடித்த நிறைய சம்பவங்கள் அதிலும் இருக்கிறது. இதிலும் இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE