“சிவராஜ்குமாரை புதிய அவதாரத்தில் இப்படம் காட்டும்” -  ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ பட இயக்குநர் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: கன்னடத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ (Sapta Saagaradaache Ello)பட வரிசையின் இயக்குநர், சிவராஜ் குமாருடன் புதிய படம் ஒன்றுக்காக இணைகிறார். இந்தப் படத்துக்கு ‘பைரவனா கோனே பாடா’ (Bhairavana Kone Paata) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் படம் குறித்தும் இயக்குநர் பேசியுள்ளார்.

ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான கன்னட படம் ‘Sapta Sagaradaache Ello - Side A’. இப்படம் திரையரங்குகளில் வெளியானதை விட, ஓடிடி வெளியீட்டுக்குப் பின் பலதரப்பட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

இப்படங்களின் இயக்குநர் ஹேமந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சிவராஜ் குமார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை வைஷாக் கவுடா தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்துக்கு ‘பைரவனா கோனே பாடா’ (Bhairavana Kone Paata) என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் லுக் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் ஹேமந்த் ராவ் கூறுகையில், “சப்த சாகரதாச்சே எல்லோ படப்பிடிப்புக்குப் பிறகு நான் இந்த ஸ்கிரிப்ட் எழுதினேன். சிவண்ணா இந்த கான்செப்ட் பிடித்திருந்தது என்றார். அவருக்கு படம் பண்ணுவது என்பது மிகவும் கடினமானது.

ஏனென்றால் அவர் 120 படத்துக்கும் மேல் நடித்த ஒரு நடிகர். அனைத்து விதமான வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படம் அவரை ஒரு புது அவதாரத்தில் காண்பிக்கும் என உறுதியளிக்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. பான் இந்தியா முறையில் வெளியிடப்படும் இப்படம் 2025-ல் வெளியாகும் மிகப்பெரிய படமாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE