பிரபல இந்தி நடிகரான வித்யுத் ஜம்வால், தமிழில் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்துள்ளார். இப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் இந்தியில் கிராக் என்ற படத்தை இணை தயாரிப்பு செய்து நடித்தார். இதில் நோரா பதேஹி,எமி ஜாக்சன், அர்ஜுன் ராம்பால் உட்பட பலர் நடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் வெற்றி பெறவில்லை. ரூ.45 கோடியில் உருவான இந்தப் படம், ரூ.17 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் கூறியுள்ளார். “இந்த இழப்பில் இருந்து எப்படி வெளி வர வேண்டும் என்பது கேள்வியாக இருந்தது. நம் மேல் அக்கறை கொண்டவர்கள் தரும் ஆலோசனைகளில் இருந்து விலகி இருக்க நினைத்தேன். ‘கிராக்’ தோல்விக்குப் பிறகு பிரெஞ்சு சர்க்கஸ் குழுவுடன் இணைந்தேன். அங்கிருந்தவர்களின் சிரமங்களைப் பார்த்தபோது எனது கஷ்டம் சாதாரணம் என்று தெரிந்தது. அங்கிருந்து திரும்பி நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க முறையாகத் திட்டமிட்டேன். அடுத்த மூன்றே மாதங்களில் என் கடன்களைத் தீர்த்தேன். இது அதிசயம்தான்" என்று வித்யுத் ஜம்வால் கூறியுள்ளார்.