‘கல்கி 2898 ஏடி’-ன் இரண்டாம் பாகத்தில்தான் எனக்கு வேலை: கமல்ஹாசன் விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “திடீரென அரசியல் பேசுகிறீர்களே என்கிறார்கள். திடீர் என்று இல்லை. ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ படங்களில் அரசியல் பேசியவன் நான். எவ்வளவு தூரம் அரசியல் பேசுகிறோம் என்பதை பொறுத்தது தான் எல்லாம்” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் சிறப்புத் திரையிடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பார்த்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்கி 2898 ஏடி’ படத்தில் நான் சில நிமிடங்கள் தான் வருகிறேன். எனக்கு 2-ம் பாகத்தில் தான் வேலை. கிட்டத்தட்ட ரசிகர்கள் பார்ப்பது போல தான் நானும் இந்தப் படத்தை வியந்து பார்க்கிறேன். இந்திய சினிமா உலக தரத்தை நோக்கி நகர்வதாக நினைக்கிறேன். அதில் ஒன்று தான் இந்தப் படம்.

நம் கையால் செய்த ஆயுதங்களாக இருந்தாலும், அதன் வலிமை உலகம் முழுவதும் பேசப்படும் என்பதற்கான அடையாளம் இது. அறிவியல் புனைவு, புராணம் இரண்டையும் கலந்து, மதச்சார்பும் அதிகமாக இல்லாமல் நேர்த்தியாக படத்தை உருவாக்கியுள்ளனர். நான் புராண கதைக் கொண்ட படங்களில் நடித்தது கிடையாது. நான் மனிதர்களுடன் வாழ்பவன். இருந்தாலும், சுவாரஸ்யமான கதையை சொன்னதால் ஒப்புக்கொண்டேன். ஜனரஞ்சகமான படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்ட படமாகதான் இதை கருதுகிறேன். நான் படத்தை ரசிக்கிறேனே என நீங்கள் கேட்கலாம். எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருப்பதை நினைவுப்படுத்தும் படம். இந்த முயற்சியில் என் பங்கும் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் இந்திய திரைப்படத் தொழிலுக்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்.

பார்வையாளர்களுக்கு தெரியாது, புரியாது என சொல்வதை நான் ஏற்கமாட்டேன். மொழியே இல்லாவிட்டாலும், நன்றாக இருக்கும் படைப்பு தமிழர்கள் ரசிப்பார்கள். ‘மரோசரித்ரா’ என்ற தெலுங்கு படம் எந்த டப்பிங்கும் இல்லாமல் தெலுங்கு படமாகவே இங்கே ஓடியிருக்கிறது. நாம் தான் கலைக்கு மொழியை திணிக்கிறோம். சினிமா என்பது தனி மொழி. அந்த மொழி தன்னுடைய பலத்தை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது” என்றார்.

மேலும் பேசிய அவர், “நல்லவர்கள் கையில் அரசியல் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். திடீரென அரசியல் பேசுகிறீர்களே என்கிறார்கள். திடீர் என்று இல்லை. ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ படங்களில் அரசியல் பேசியவன் நான். எவ்வளவு தூரம் அரசியல் பேசுகிறோம் என்பதை பொறுத்தது தான்” என்றார். அதிமுக போராட்டம் குறித்து கேட்டதற்கு, “போராட்டங்கள் தொடரும், சட்டம் வெல்லும்” என முடித்துக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE