காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.நகரைச் சேர்ந்த ஜெஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனரான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார் தனது நிறுவனத்தின் சார்பில் ‘வா டீல்’, ‘மெல்லிசை’, ‘புரியாத புதிர்’, ‘தரமணி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’, ‘அண்டாவைக் காணோம்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்தப் படங்களை தயாரிப்பதற்காக சினிமா ஃபைனான்சியரான ககன் போத்ராவிடம் ரூ.2.6 கோடி இவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த தொகைக்காக சதீஷ்குமார் வழங்கிய ரூ.35 லட்சம் மற்றும் ரூ. 45 லட்சம் மற்றும் ரூ. 27 லட்சத்துக்கான வங்கி காசோலைகள் பணமின்றி திரும்பியதால், சதீஷ்குமார் மீது ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா முன்பாக நடந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத் தயாரிப்பாளரான ஜெ. சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE