வைரல் வீடியோ எதிரொலி: மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த நாகர்ஜுனா!

By செய்திப்பிரிவு

மும்பை: சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் நடிகர் நாகர்ஜுனாவுடன் செல்பி எடுக்க வந்த மாற்றுத்திறனாளி ரசிகரை பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை கிளப்பிய நிலையில் தற்போது அந்த ரசிகரை நாகர்ஜுனா நேரில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், நாகர்ஜுனாவிடம் மன்னிப்புக் கேட்ட ரசிகரிடம், ‘மன்னிப்பு கேட்கவேண்டாம். இது உங்களுடைய தவறு இல்லை” என்று தெரிவித்துவிட்டு அந்த ரசிகரை கட்டியணைத்து வாழ்த்திவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக அண்மையில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து இருவரும் தங்களது கார் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்றனர். அப்போது விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் நடிகர் நாகர்ஜுனாவை நோக்கி வந்தார். அப்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர்கள் அந்த மாற்றுத்திறனாளி ரசிகரை வேகமாக தள்ளிவிட்டனர். இதை பின்னாலிருந்து வந்த நடிகர் தனுஷ் கண்டும் காணாமல் நடந்துவந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், “குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லையா?” என சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதையடுத்து நடிகர் நாகர்ஜுனா சம்பந்தப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE