சென்னை: ரூமேனியா நாட்டில் நடைபெறும் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் தேர்வாகியுள்ளது.
‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படம் 53-வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வானது. பின்னர் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படம் ரூமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது.
நவீன சினிமாக்களுக்கான ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது.