‘புஷ்பா 2’ ஒத்திவைப்பு எதிரொலி: ‘டபுள் இஸ்மார்ட்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் இஸ்மார்ட்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளியாக உள்ளது.

ராம் பொத்தினேனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகன்நாத் இயக்கி, தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது.

'இஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் மீண்டும் இணையும் இப்படத்தை சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் முதலில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஏற்பட்ட தாமத்தால் சில தினங்களுக்கு முன்பு இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த தேதியில் ‘டபுஸ் இஸ்மார்ட்’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வியாழக்கிழமை வருகிறது. சனி,ஞாயிறு, வார இறுதி முடிந்து திங்கள்கிழமை ரக்‌ஷா பந்தன் வருகிறது. தொடர்ந்து விடுமுறை தினங்கள் அடுத்தடுத்து வருவதால் இது வசூலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருப்பதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE