சர்ச்சையில் ‘கல்கி 2898 ஏடி’ - தனது ஐடியா திருடப்பட்டதாக ஹாலிவுட் கலைஞர் குற்றச்சாட்டு!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றில் தன்னுடைய வரைகலை இடம்பெற்றிருப்பதாகவும், அது அப்படியே காப்பியடிக்கப்பட்டு உள்ளதாகவும் கான்செப்ட் இல்லஸ்ட்ரேட்டர் சங் சோய் குற்றம்சாட்டியுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிதுதள்ளனர். படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ‘கல்கி 2898 ஏடி’ ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த கான்செப்ட் இல்லஸ்ட்ரேட்டர் சங் சோய். இவர் ஹாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தன்னுடைய கிராபிக்ஸ் வடிவமைப்பு (Art Work) திருடப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் தான் உருவாக்கிய கிராபிக்ஸ் வடிவமைப்பு (Art Work) ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் வடிவமைப்பு (Art Work) ஒப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கலைப் படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துவது தவறான நடைமுறை. சில நேரங்களில் இதுபோன்ற சட்டபூர்வமற்ற சூழலில் கலைகளை உருவாக்குவது கூட கேள்விக்குறியாகிவிடுகிறது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE