ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன் - யார் இவர்?

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மைசூரில் இருந்த அவரை நேற்று (ஜூன் 11) கைது செய்த கர்நாடக காவல்துறை, பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது.

7 மணி நேர விசாரணைக்குப் பிறகு, நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. தர்ஷன் உள்ளிட்ட 12 பேர் இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வந்து சித்திரவதை செய்து காமாட்சிபாளையத்தில் வாய்க்காலில் கொன்று வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த தர்ஷன் தூகுதீபா?: கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தர்ஷன், ‘சேலஞ்சிங் ஸ்டார்’, ‘தி பாஸ்’ என அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சினிமா குடும்பத்தைச் சேர்ந்த இவர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன். தூகுதீபா ஸ்ரீனிவாஸ் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர். தர்ஷன் - விஜயலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு.

1990-களின் நடுவே தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் தர்ஷன். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மெஜஸ்டிக்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதன் பிறகு கரியா (2003), கலாசிபால்யா (2005), கஜா (2008), நவகிரகம் (2008), சாரதி (2011), புல்புல் (2013), கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா (2012), குருக்ஷேத்ரா (2012), யஜமானா (2019), ராபர்ட் (2021) மற்றும் காடேரா (2023) என அவர் நடிப்பில் வெளியான இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

கன்னட திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் தர்ஷன். அதேசமயம் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகரும் கூட.

தர்ஷனும் சர்ச்சைகளும்: கடந்த 2011-ம் ஆண்டு மனைவி விஜயலட்சுமியை, தர்ஷன் தாக்கியதாக புகார் எழுந்தது. விஜயநகர் காவல்துறையால் கைது செய்யபட்ட அவர் மீது கொலை முயற்சி, குடும்ப வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டது. நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மைசூருவின் புறநகரில் உள்ள தர்ஷனின் டி.நரசிபுரா பண்ணையில் வரித்தலை வாத்து (Bar-headed goose) இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அழிந்து வரும் பறவையினங்கள் பட்டியலில் இருக்கும் இந்த வாத்தை சட்டத்தை மீறி வைத்திருந்ததாக தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரியில், பெங்களூருவில் உள்ள க்ளப் ஒன்றில் இரவு வெகுநேரம் பார்டி நடத்தியது, பிரச்சினை செய்த விவகாரத்தில் காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய திரையுல நட்சத்திரங்களில் தர்ஷனும் ஒருவர். தற்போது அவர் மீது கொலை வழக்கு விசாரணையும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE