‘ஃபிலிம் சிட்டியும் சினிமா ஆர்வமும்...’ - ராமோஜி ராவுக்கு ரஜினி முதல் ராஜமவுலி வரை புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘ஈ நாடு’ ஊடக நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது வழிகாட்டியும், நலம் விரும்பியுமான ஸ்ரீ ராமோஜி ராவ் மறைவைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஊடகம் மற்றும் திரையுலகில் அதிக அனுபவம் வாய்ந்தவரும், ‘ஈ’நாடு குழுமத்தின் தலைவரான ராமோஜி ராவ் மறைவு வருத்தமளிக்கிறது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி அவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு படப்பிடிப்பு இடம் மட்டுமல்ல, பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. தொலைநோக்கு மற்றும் புதுமையான சிந்தனையாளரின் மறைவு இந்திய சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது எக்ஸ் பக்கத்தில், “ராமோஜி ராவ் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் லட்சத்தில் சிலர் மட்டுமே. ஊடக அதிபரும், இந்திய சினிமாவின் மாபெரும் தலைவருமான அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ‘நின்னு சூடலானி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான போது அவருடனான நினைவுகளை என்னால் மறக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் மகேஷ்பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில், “தொலைநோக்கு பார்வையுடைய ராமோஜி ராவ் மறைவு வருத்தமளிக்கிறது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி அவரது புத்திசாலித்தனத்துக்கும், சினிமா மீதான அவரது ஆர்வத்துக்குமான சான்று. குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு மனிதன் தனது 50 ஆண்டுகால விடாமுயற்சி, கடின உழைப்பு மூலம் மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் நம்பிக்கையையும் அளித்தார். ராமோஜி ராவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்குவதுதான் அவருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் ஒரே வழி” என பதிவிட்டுள்ளார். இதை வழி மொழிந்துள்ள நடிகர் அல்லு அர்ஜூன், “என் மனதில் இருந்ததை பேசியுள்ளீர்கள். குரல் கொடுத்தற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் ராமோஜி ராவ் மறைவையொட்டி மவுன அஞ்சலி செலுத்தினர்.

ராமோஜி ராவ் மறைவு: கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 4.50 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இதனை ஈ நாடு ஊடக குழுமம் உறுதி செய்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவரும் இவர்தான். இந்த தளத்தில் பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE