“பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கவில்லை” - ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: “தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தனது ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திமுக தலைவர், என்னுடைய அருமை நண்பர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும். மத்தியில் என்டிஏ கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்” என்றார்.

பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இன்னும் அது குறித்து முடிவெடுக்கவில்லை” என்றார். தொடர்ந்து, “வழக்கமாக வருடா வருடம் நான் செல்லும் ஆன்மிக பயணம்தான் இது. ரிஷிகேஷ், பத்ரிநாத், பாபாஜி குகை அங்கெல்லாம் சென்று வந்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE