இமயமலை பயணம் நிறைவு: ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒருவார கால பயணமாக இமயமலை சென்ற நடிகர் ரஜினி காந்த், நாளை சென்னை திரும்புகிறார்.

நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப் பயணமாக இமயமலை செல்வது வழக்கம். கரோனா காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்றார்.

இந்த வருடம் கடந்த மாதம் 29-ம் தேதி தனது நண்பர்களுடன் இமயமலை சென்றார். அங்கு வழக்கமாகச் செல்லும் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

பத்ரிநாத்தில், யோகி ஒருவருடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, தான் நடிக்கும் படங்கள் பற்றிய தகவலை அவரிடம் தெரிவித்தார். அதில், ‘வேட்டையன்’ படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அக்.10-ம் தேதி வெளியாகும் என்றும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10-ல் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், தனது இமயமலை பயணத்தை முடித்துள்ள ரஜினிகாந்த், நாளை மாலை சென்னை திரும்புகிறார். அவர் அடுத்து நடிக்கும் ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE