புதுச்சேரி: ‘பாஜகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும், வேறு வழியில்லை’ என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை நமீதா வந்திருந்தார். பாஜகவில் இணைந்திருந்த அவரிடம் அரசியல் தொடர்பாக கேட்டதற்கு, ‘அரசியல் பற்றி பேச மாட்டேன்’ என்று குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (ஜூன் 4) வெளியாகவுள்ளது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் வாக்களித்து முடிவு எடுத்துவிட்டனர். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஏனெனில், கடந்த 2019-ல் பாஜகவில் நான் சேர்ந்தபோது தவறான முடிவு எடுத்து விட்டதாக பலரும் தெரிவித்தனர். நான் சரியான முடிவை எடுத்ததாக உறுதியாக நம்பினேன். தற்போது நாடு நல்ல முன்னேற்றத்துக்கு சென்றுள்ளது. இன்னும் நமது நாடு முன்னேறவுள்ளது. பாஜகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும். வேறு வழியில்லை’ என்று அவர் கூறினார்.