“மம்மூட்டி நடிப்பதாக இருந்தது... ‘அஞ்சாமை’ கதையை கேட்டு அழுதுவிட்டேன்!” - விதார்த் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “கதையைக் கேட்கும்போதே நான் அழுக ஆரம்பித்துவிட்டேன். அட்டகாசமான கதை. படத்தில் மம்மூட்டி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்க முடியாமல் போனது” என ‘அஞ்சாமை’ படம் குறித்து நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.

விதார்த், வாணி போஜன் நடித்துள்ள ‘விதார்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விதார்த், “கதையைக் கேட்கும்போதே நான் அழுக ஆரம்பித்துவிட்டேன். அட்டகாசமான கதை. ஆனால், இந்த கதையில் நாம் எப்படி நடிக்கப்போகிறோம் என யோசித்தேன். 4 கால கட்டங்களில் படம் நடக்கிறது. என்னுடைய தோற்றம் அப்படியே லைவாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பை நடத்தினோம்.

இந்தப் படத்துக்காக நான் சில படங்களை கைவிட்டேன். இடையில் பொருளாதாரத்துக்கான நான் சில படங்களில் நடித்தேன். அதற்கு படக்குழு ஒத்துழைப்பு கொடுத்தனர். நடிகர் மம்மூட்டி படத்தில் நடிப்பதாக இருந்தது. அவருக்கு இந்தக் கதை பிடித்திருந்தது. படம் இணைந்து பண்ணலாம் என முடிவெடுக்கும்போது, கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகி, நடிகர் ரகுமான் படத்துக்குள் வந்தார். சிறப்பாக நடித்துக்கொடுத்துள்ளார்.

மக்கள் குறைகளை அரசனிடம் கலைகள் மூலமாகத் தான் சொல்ல வந்தார்கள். என்னுடைய தொடக்கம் என்பது கூத்துப்பட்டறை, நாடகம் மூலமாகத்தான் தொடங்கினேன். அப்போது மக்களுக்கான பிரச்சினைகளை நாடகத்தின் வாயிலாக பேசினோம்.

இன்றைக்கு சினிமாவை பொழுதுபோக்கு துறை என சொன்னாலும் பலரும் தங்கள் கருத்துகளை அதன் வாயிலாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழலில் இருக்கும் பிரச்சினையை மக்களின் வலியை அழுத்தமாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் படம் பார்த்து முடித்து அதிலிருந்து இன்று வரை என்னால் மீள முடியவில்லை. படம் பார்த்த அனைவரும் படத்துக்குள் மூழ்கிவிடுவீர்கள். உங்களால் கனெக்ட் செய்ய முடியும். ஒரு பிரச்சினையை என்னுடைய நடிப்பால் சொல்ல முடிந்ததற்கு பெருமைப்படுகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE