“அதென்ன லட்சுமி கேஸ்?” - விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதியின் 50-வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சலூன் கடைக்காராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

ட்ரெய்லர் எப்படி? - லட்சுமியை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் விஜய் சேதுபதி புகார் கொடுப்பதாக ஆரம்பிக்கும் டிரெய்லரில், முதல் ஒரு நிமிடத்தில் லட்சுமியை காணவில்லை என அப்பாவியாக காட்சியளிக்கிறார். அதன்பின் டிரெய்லர் எதோ ஒரு குற்றத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. காட்சியமைப்புகள் விறுவிறுப்பான பின்னணி இசையுடன் நகர்கின்றன. இறுதிக்கட்டத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் அனுராஜ் காஷ்யப், வில்லத்தனமான லுக் கொடுத்து இந்தப் படத்தின் வில்லன் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.

ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடிந்த நிலையில் காணப்படும் ஒரு இடத்தில், சலூன் நாற்காலியில் அமர்ந்தவாறு, கையில் ரத்தம் தோய்ந்த பட்டா கத்தி ஒன்றை வைத்துகொண்டு, உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் காட்சியளித்தார் விஜய் சேதுபதி.

இதேபோல், ட்ரெய்லர் அறிவிப்பு போஸ்டரிலும், காது அறுபட்டு கட்டு போடப்பட்ட நிலையில், கையில் சவரக்கத்தி உடன், ரத்தம் தெறிக்க காட்சியளித்தார். தற்போது ட்ரெய்லரிலும் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் இது சென்னையை மையமாக கொண்ட ஒரு இன்வஸ்டிகேஷன் - ஆக்சன் படமாக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE