ஹைதராபாத்: “அஜித்தின் முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இசையை வெளியிட்டேன். அந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டோம். அஜித் உச்சநட்சத்திர அந்தஸ்தை அடைந்தாலும், மாறா அன்புடன் இருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது” என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயகத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. இதனிடையே நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அதேபோல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஸ்வம்பரா’ ( Vishwambhara) படத்தில் நடித்து வருகிறார். இருவரின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டூடியோவில் சிரஞ்சீவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிந்த நடிகர் அஜித், மரியாதை நிமித்தமாக நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில், “மிகவும் அன்பான மனிதரான நடிகர் அஜித் படப்பிடிப்பிலிருந்து வந்து என்னை நேரில் சந்தித்தார். நாங்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினோம். அவரது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இசையை வெளியிட்டேன்.
» “விஜய் அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு” - எஸ்.ஏ.சந்திரசேகர்
» “மோடி பயோபிக்கை பா.ரஞ்சித், வெற்றிமாறன் எடுத்தால் நன்றாக இருக்கும்” - சத்யராஜ்
அந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டோம். மேலும் அவரது அன்பான மனைவி ஷாலினி, நான் நடித்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’(Jagadeka Veerudu Athiloka Sundari) படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஏராளமான நினைவுகளை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
இத்தனை ஆண்டுகளில் அஜித் அடைந்திருக்கும் உச்சநட்சத்திர அந்தஸ்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம் அவர் இன்றும் மாறாத அன்புடன் இருப்பது நெகிழ்வைத் தருகிறது” என பதிவிட்டுள்ளார்.