“மக்களிடம் எதிர்பார்க்க முடியாதது...” - நடிகர் மம்மூட்டி பதில் வைரல்

By செய்திப்பிரிவு

சென்னை: “உலகம் அழியும் வரை மக்கள் தங்களை நினைத்துக் கொண்டேயிருப்பார்கள் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. யாருக்கும் அப்படி நடக்கப் போவதில்லை. மக்கள் உங்களை நினைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது” என்று நடிகர் மம்மூட்டி பேசியுள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு மம்மூட்டி அளித்த பேட்டியின் சிறு பகுதி வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். காரணம் மம்மூட்டியின் கருத்து ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்தப் பேட்டியில், “நடிகர்கள் ஒரு கட்டத்தில் போதும் என முடிவெடுத்து திரையுலகிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். நீங்கள் அந்த ‘போதும்’ என புள்ளிக்கு வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “இல்லை. நான் ‘போதும்’ என அயற்சி அடைந்ததாக நினைக்கவில்லை. என் கடைசி மூச்சு வரை நடித்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

‘இறுதி மூச்சுவரை சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன் என்கிறீர்கள். மம்மூக்காவை இந்த உலகம் எப்படி நினைவுகூர வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “எத்தனை நாட்கள் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வருடம், பத்து வருடம், 15 வருடம் அவ்வளவு தான். உலகம் அழியும் வரை மக்கள் உங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாருக்கும் அப்படி நடக்கப்போவதில்லை.

மிகச் சிறந்த நபர்கள் கூட மிகச் சொற்பமாகவே நினைவுக்கூரப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன். அப்படியிருக்கும்போது எப்படி என்னை காலம் கடந்து நினைவுகூர்வார்கள்; அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் மறைந்துவிட்ட பிறகு மக்களுக்கு உங்களை எப்படி தெரியும்? உலகம் அழியும் வரை தங்களை நினைத்து கொண்டேயிருப்பார்கள் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் உது உண்மையில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE