“விஜய் 2 பாடல்களை பாடியுள்ளார்” - யுவன் கொடுத்த ‘தி கோட்’ பட அப்டேட்

By செய்திப்பிரிவு

சென்னை: “இதற்கு முன் இல்லாத வகையில் முதன்முறையாக ‘தி கோட்’ படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் நடிக்கும் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் நிறைவடையும் எனத் தெரிகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடலை விஜய் பாடியிருந்தார். அப்பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

படத்தில் நடிகர் விஜய் மற்றொரு பாடலையும் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் யுவன் ஷங்கர் ராஜாவிடம் ‘தி கோட்’ பட அப்டேட் கேட்டபோது, “முதல் முறையாக விஜய், இந்தப் படத்தில் 2 பாடல்களை பாடியுள்ளார்” என தெரிவித்தார். அவரது குரலில் உருவாகியுள்ள மற்றொரு பாடல் ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE