கார்த்தி - நலன் குமாரசாமியின் ‘வா வாத்தியார்’ பட முதல் தோற்றம் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: கார்த்தி நடிக்கும் 26-வது படத்துக்கு ‘வா வாத்தியார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றமும், டைட்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கார்த்தியின் 25-வது படமான ‘ஜப்பான்’ எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து அவர் நடிக்கும் 27-வது படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் நேற்று (மே 24) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 26-வது பட அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார்.

‘வா வாத்தியார்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் தோற்றம் எப்படி? - மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரை ரசிகர்கள் ‘வாத்தியார்’ என அழைப்பது உண்டு. அந்த வகையில் படத்தின் தலைப்பும் போஸ்டரும், நாயகன் எம்ஜிஆர் ரசிகர் என்பதை உறுதி செய்கிறது. காவல்துறை உடையணிந்து கார்த்தி நிற்க, அவருக்குப் பின்னாலும், அவரைச் சுற்றியும் எம்ஜிஆரின் வெவ்வேறு கெட்டப்புகள் கொண்ட உருவப் படங்கள் உள்ளன.

படத்தில் கார்த்தி போலீஸாக நடிக்கிறாரா? அவர், வெறும் எம்ஜிஆர் ரசிகரா அல்லது அதைத் தாண்டி வேறு எதையும் படம் பேசுகிறதா உள்ளிட்ட பல கேள்விகளும், நலன் குமாரசாமியின் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் வெளியாகும் படம் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE