ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக நடிகர் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஹீட் ஸ்ட்ரோக் காரணமான நடிகர் ஷாருக் கான் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய (மே 21) ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியை கொல்கத்தா அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மைதானத்தில் நிலவிய அதீத வெப்பம் காரணமாக ஷாருக் கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து உடனடியாக ஷாருக் கானின் மனைவி கவுரி கான் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.

பாலிவுட் நடிகையும், கொல்கத்தா அணியின் மற்றொரு உரிமையாளருமான ஜூஹி சாவ்லாவும் ஷாருக் கானை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். ஷாருக்கானின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக் கான் விரைவில் குணமடைய அவரது ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE