சென்னை: சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வருகையால் வசூல் அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியிடப்பட்டு வரும் இப்படத்தின் நான்காவது பாகம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சுந்தர்.சி தன்னுடைய முந்தைய ‘அரண்மனை’ சீரிஸ் படங்களில் இருந்த கவர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை தவிர்த்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இலக்காக கொண்டு உருவாக்கிய இப்படம் கோடைக்கால விடுமுறையால் பலன் கொடுத்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், உலகம் முழுவதும் 19 நாட்களில் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
» ‘அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...’ - கமலின் ‘இந்தியன் 2’ முதல் சிங்கிள் எப்படி?
» “விருதுகளை துணியால் சுற்றி வைத்திருந்தார் என் அம்மா” - ரஹ்மான் சுவாரஸ்ய பகிர்வு
கோலிவுட்டில் இந்த ஆண்டு ‘கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு ரூ.100 கோடியை வசூலித்து படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘அரண்மனை 4’.