பிரசாந்த் நீல் உடன் கைகோக்கும் ஜூனியர் என்டிஆர் - ஆகஸ்டில் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘தேவரா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிளான ‘Fear Song’ வெளியிடப்பட்டுள்ளது. படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், அடுத்து உருவாகும் என்டிஆரின் 31-வது படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎஃப்’ படம் மூலம் புகழ் பெற்ற பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். ஆனால் அது பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE