விஜய்யின் ‘தி கோட்’ பட விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவு: வெங்கட்பிரபு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் தன்னுடைய பாதி டப்பிங்கை நடிகர் விஜய் பேசி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடிட்டிங், டப்பிங் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த வெங்கட்பிரபு அதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வெற்றிகரமாக விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அவுட்புட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE