சென்னை: நடிகர் ராமராஜன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம், 'சாமானியன்'. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆர்.ராகேஷ் இயக்கி இருக்கிறார். இளையராஜா இசை அமைத்துள்ளார். இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். படம் பற்றி ராமராஜன் கூறியதாவது:
நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடிக்கவில்லை என்றால், எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அல்லது கேட்ட கதை எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு 2010-ம் ஆண்டு மிகப்பெரிய கார் விபத்தை சந்தித்தேன். அதில் இருந்து மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
இந்தப்படத்தின் கதைதான் இதில் நான் நடிக்க காரணம். இதுவரை நான் நடிக்காத கதை. இதுவரை திரை உலகம் சந்தித்திராத கதை. என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், இளையராஜாவின் பாட்டுதான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு ஜோடி இல்லை. அதோடு பாட்டும் இல்லை. எனக்காக ஒரே ஒரு பாட்டை இளையராஜா படத்தில் சேர்த்தார். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். இப்படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை கேட்டுள்ளேன்.
‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா? என கேட்கிறார்கள். இயக்குநர் கங்கை அமரன் கூட ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலாமா? என கேட்டார். நான் மறுத்து விட்டேன். இவ்வாறு ராமராஜன் கூறினார்.