வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும் இந்த கட்டத்தில் வெளியாகியுள்ளது ‘எலக்சன்’.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு முக்கிய கட்சிக்காக இளம் வயது முதல் பல ஆண்டுகளாக உழைத்தும் எந்தவித பதவியையும் அடையாமல் கடைக்கோடி தொண்டனாகவே காலத்தை கடத்தியவர் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). அவரது மகன் நடராசன் (விஜய்குமார்) அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர். ஆனால், தங்கை கணவரின் தூண்டுதலால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார் நடராசன். இது அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் சில மிகப் பெரிய சிக்கல்களை உண்டாக்குகிறது. சில உயிர்களும் போகின்றன. தடைகளைக் கடந்து தேர்தலில் நடராசன் வென்றாரா? சிக்கல்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்தார்? - இதுதான் ‘எலக்சன்’ படத்தின் திரைக்கதை.
தனது முதல் படமான ‘சேத்துமான்’ மூலம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் உணவு அரசியலை வெளிப்படையாக பேசிய இயக்குநர் தமிழ், இம்முறை தேர்தல் அரசியல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். தலைப்புக்கு நியாயம் செய்யும் வகையில், உள்ளாட்சி அரசியல் எந்த அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை முடிந்தவரை அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார்.
தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளாட்சி அரசியல் குறித்து தகவல்கள் நுணுக்கமாக பேசப்படுவது கதைக்குள் நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. எனினும் படம் தொடங்கிய 10 நிமிடத்துக்குள்ளேயே காதல் ஒரு பாடலை வைத்து நம்மை கடுப்பேற்றவும் தவறவில்லை. ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்கிறாஎ என்பதை சொல்ல ஓரிரு காட்சி போதாதா? இத்தனைக்கும் அந்த பகுதியை வைக்காமல் படத்துக்குள் நேரடியாக சென்றிருந்தாலும் கூட பெரிய பாதிப்பு இருந்திருக்காது. அப்படியிருக்க கதைக்குள் நுழையும் முன்பே ஒரு முழுநீள லவ் பாடலை வைத்திருப்பது சுணக்கத்தை தருகிறது.
அதன்பிறகு விஜய்குமார் தேர்தலுக்கு தயாராவது தொடங்கி இடைவேளை வரையிலான காட்சிகள் போரடிக்காத வகையில் ஓரளவு சுவாரஸ்யமாகவே நகர்கின்றன. குறிப்பாக வாக்குகள் எண்ணப்படும் காட்சியும், அதனை தொடர்ந்து வரும் காட்சிகளும் விறுவிறுப்பு தருகின்றன.
படத்தின் பலவீனம் என்று பார்த்தால் பல இடங்களில் வரும் நீள நீளமான வசனங்களை சொல்லலாம். காட்சிகளாக உணர்த்தியிருக்க வேண்டிய இடங்களில் வசனங்களை கொண்டு நிரப்பியது ஒட்டவில்லை. அதேபோல சுவாரஸ்யமாகப் போகும் இடங்களில் எல்லாம் ஸ்பீடு பிரேக்கர்களாய் பாடல்களைக் கொண்டு வந்து வைத்தது பெரிய மைனஸ். அவை மான்டேஜ்களாக இருந்தாலும் படத்தின் வேகத்தை குறைத்து விடுவதாகவே தோன்றுகிறது. திடீரென இரண்டாம் பாதியில் ஒரு வில்லனைக் கொண்டு வருவது, அவருக்கான காரணங்களாய் சொல்லப்படும் விஷயங்களும் அழுத்தமாக இல்லை.
நாயகனாக விஜய்குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். எனினும் பல இடங்களில் அவர் நடிக்க சிரமப்படுவது தெரிகிறது. ’அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு இதிலும் அழுத்தமான கதாபாத்திரம். அதற்கு தன்னால் முடிந்தவரை நியாயம் சேர்த்துள்ளார். ஹீரோவின் அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான், மாமாவாக வரும் பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி என அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் இசை பல இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்தவும், சில இடங்களில் காட்சிகளை மீறி துருத்திக் கொண்டும் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் தேவையில்லாத ஆணி. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் குறையில்லை. சி.எஸ்.பிரேம்குமார் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதியில் பல இடங்களில் ஃபில்லர்களாக பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்லோ மோஷன் காட்சிகள் காட்சிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்பு குறித்தும் அதை சுற்றி நடக்கும் சாதி அரசியல், உள்ளடி வேலைகள் என நுணுக்கமாகவும் தைரியமாகவும் பேசிய இயக்குநரை மனமார பாராட்டலாம். அதே நேரம் திரைக்கதையில் இருக்கும் தேவையற்ற திணிப்புகளை களைந்து அழுத்தத்தை கூட்டியிருந்தால் தமிழின் தவிர்க்க முடியாத அரசியல் படமாக கொண்டாடப்பட்டிருக்கும் ‘எலக்சன்’.