மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா? - பிருத்விராஜ் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: “நானும், மம்மூட்டியும் இணைந்து நடிக்கும் கதை ஒன்று உள்ளது. அந்தக் கதை எங்கள் இருவருக்கும் பிடித்துள்ளது” என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ், பசில் ஜோசஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’. இந்தப் படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட புரொமோஷனில் ஈடுப்பட்டு வரும் பிருத்விராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நானும் மம்மூட்டியும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என பலரும் விரும்புகிறார்கள்.

அப்படி ஒரு கதை உள்ளது. நானும், மம்மூட்டியும் அந்தக் கதையைக் கேட்டோம். இருவருக்கும் பிடித்துள்ளது. ஆனால், மம்மூட்டி தனது அடுத்தடுத்த படங்களால் பிஸியாக நடித்து வருகிறார். அதனால் இந்தப் படம் உருவாக்கம் சவாலானதாக இருக்கும்” என்றார்.

கடந்த 2012-ம் ஆண்டு பிருத்விராஜ், மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும், சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் படம் பிரமாண்டமாக உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் ப்ரீ புரொடக்‌ஷனிலேயே நின்றுவிட்டது. இது குறித்து கேட்டதற்கு, “சில காரணங்களால் அந்தப் படம் கைவிட்டப்பட்டது” என்றார் பிருத்விராஜ்.

‘ப்ரோ டாடி’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பிருத்விராஜ் இயக்கி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல அடுத்து ‘எம்புரான்’ படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி வருகிறார். அந்த வகையில் மற்றொரு மலையாள சூப்பர்ஸ்டாரான மம்மூட்டியுடன் அவர் இணைவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து பிருத்விராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE