கொச்சி: மலையாளத்தில் உருவான மஞ்ஞும்மெல் பாய்ஸ் படம் கடந்த பிப்.22-ல் வெளியானது. சிதம்பரம் இயக்கிய இதில் சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்தனர். கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் தவறி விழுந்துவிடுகிறார். அவரைக் காப்பாற்ற மற்றவர்கள் நடத்தும் போராட்டம்தான் படத்தின் கதை. குழிக்குள் தவறி விழுந்த சுபாஷாக ஸ்ரீநாத் பாஸி நடித்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் வரவேற்பைப் பெற்றது.
ஸ்ரீநாத் பாஸி, குழிக்குள் விழுந்து கிடக்கும் காட்சிக்கான மேக்கப், பரவலான பாராட்டைப் பெற்றது. அந்த மேக்கப்புக்கு ஓரியோ பிஸ்கட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் சிதம்பரம் தற்போது தெரிவித்துள்ளார்.
“மேக்கப்பில் இப்படி புதிய முறையை புகுத்தினாலும் அந்தக் காட்சிகளை படமாக்கும்போது கஷ்டப்பட்டோம். அந்த பிஸ்கட்டுக்காக எறும்புகள் அவர் மீதேறி கடித்தன. அதைத் தாங்கிக் கொண்டு நடித்தார். மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியருக்கு நன்றி. அந்த மேக்கப்பில் அவரைப் பார்த்த சவுபின் சாஹிரும் ஆச்சரியப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.