ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்துக்கு நடிகர் ரஜினி தயாராகிறார்.

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் கமிட் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

‘வேட்டையன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சி நடைபெற உள்ளன. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE