நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த சூர்யா முடிவு

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இந்தக் கட்சி 2026-ல் நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தனது மக்கள் இயக்கம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வந்தார்.

விஜய்யை அடுத்து விஷாலும்அரசியலில் களமிறங்க இருக்கிறார். அதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் தனது நற்பணி இயக்கத்தை வலுப்படுத்துகிறார். சூர்யாவின் நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

அந்த மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்து, மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம், கடலூர் கிழக்கு, தெற்கு, மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வர அடித்தளமிடுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE