அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கானத் தேர்தல் ஒன்றாக நடைபெறுகிறது. வாக்குப் பதிவு இன்று நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று முன் தினம் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன், தனது மனைவி ஸ்நேகாவுடன் நந்தியால் சட்டப்பேரவை தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான ஷில்பா ரவிச்சந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டுக்குச் சென்றார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அல்லு அர்ஜுன் முன் அனுமதி பெறாமல் வந்தார். அவர் வருவதை அறிந்து அந்தப் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப் பார்த்து அல்லு அர்ஜுன் கையசைத்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரின் கையை உயர்த்தி ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, வேட்பாளர் ஷில்பா ரவிச்சந்திர கிஷோர் மற்றும் அல்லு அர்ஜுன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE