“பாகுபலி பட புரொமோஷனுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை” - ராஜமவுலி தகவல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “பாகுபலி படங்களின் புரொமோஷன்களுக்கு ஒரு ரூபாய் கூட நாங்கள் செலவு செய்யவில்லை. மாறாக, மூளையையும் நேரத்தையும் பயன்படுத்தினோம்” என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜமவுலி தயாரிப்பில் உருவாகும் புதிய அனிமேஷன் சீரிஸ் ‘Baahubali: Crown of Blood’. இந்தத் தொடர் வரும் மே 17-ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கும். இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராஜமவுலி, “முதல் விஷயம் நான் எப்போதும் என்னை உயர்வானவனாக நினைப்பது கிடையாது. அதேபோல தாழ்வான ஒருவனாகவும் நினைப்பது கிடையாது.

என்னுடைய புதிய படைப்பு வெளியாகும்போது, மக்கள் அதற்காக ஆவலுடன் காத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்க மாட்டேன். அதேபோல நான் எதுவுமில்லை என்றும் எண்ணமாட்டேன். எப்போதும் ஒரேமாதிரியான சரியான மனநிலையில் இருக்க விரும்புகிறேன். புதிய பார்வையாளர்களை தேடுவதில் ஆர்வம் காட்டுகிறேன்.

புது பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைப்பது வைப்பது எப்படி என்பது குறித்து யோசிப்பேன். அதற்கு ஒரே வழி பப்ளிசிட்டிதான். சொல்லப்போனால் ‘பாகுபலி’ படத்தின் புரொமோஷனுக்கு நாங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை. எந்த பத்திரிகையிலோ, இணைய தளங்களிலோ எங்கள் போஸ்டரை வெளியிட பணம் கொடுப்பது உள்ளிட்ட எந்த வேலையையும் செய்யவில்லை. ஆனால், நிறைய ஹோம்வொர்க் செய்தோம்.

அதாவது நிறைய வீடியோக்களை நாங்களே உருவாக்கினோம். டிஜிட்டல் போஸ்டர்களை தயாரித்தோம். கதாபாத்திர தோற்றங்களை வெளியிட்டோம். மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டோம். இப்படியாக நிறைய வேலைகளை செய்தோம். எனவே, இதன் மூலம் பெரிய அளவில் பப்ளிசிட்டி நிகழ்ந்தது. பலரின் கவனத்தையும் ஈர்த்தோம். ஆனால் இதற்காக நாங்கள் எந்த பணத்தையும் தனியாக செலவு செய்யவில்லை. மூளையையும், நேரத்தையும் பயன்படுத்தி வேலை செய்தோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE