திரை விமர்சனம்: அரண்மனை 4

By செய்திப்பிரிவு

வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன் அத்தையுடன் (கோவை சரளா) வசித்து வருகிறார். குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட தன் தங்கை செல்வி (தமன்னாவும்) தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது. இதனால், தன் அத்தையுடன் தமன்னாவின் ‘அரண்மனை’ வீட்டுக்குச் செல்கிறார் சுந்தர்.சி. தன் தங்கை மற்றும் அவர் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் அவர், அந்த வீட்டில் இன்னொரு உயிர் போக இருப்பதை அறிகிறார். அந்த உயிரைக் கொல்லத் துடிக்கும் தீயசக்தி எது, அது ஏன் கொல்லத் துடிக்கிறது? அந்த உயிரைக் காப்பாற்ற சுந்தர்.சி என்ன செய்கிறார் என்பது கதை.

மூவரைக் கொன்று தன் பலத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பும் தீயசக்திக்கும், அப்படிக் கொல்ல முயற்சிக்கும்போது தன் உயிரை இழக்கும் தாயின் நல் ஆத்மாவுக்கும் இடையேயான போராட்டம்தான் படத்துக்கான கரு. இயன்றவரை அதை தன் பாணியில் வேகமாகப் படமாக்கி இருக்கிறார் சுந்தர்.சி.

முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் திகில் அம்சங்களும் படத்துக்குக் கைகொடுக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதியில் ஸ்பீடு பிரேக் விழுந்தது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. திகில் படங்கள் குழந்தைகளுக்குத் குதூகலமாகிவிட்ட நிலையில், அவர்களைக் குறி வைத்து நகைச்சுவைக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. அவை சில இடங்களில் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

தீயசக்தி வெளியே வருவதும் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து விடுபடுவதும் மேம்போக்காகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட மூவரை நோக்கி தீயசக்தி கொல்ல வருவதற்கான காரணங்களுக்குப் படத்தில் விடை கிடைத்தாலும், இன்னும் அதைத் தெளிவாகப் படமாக்கியிருக்கலாம். அடுத்தடுத்து கோவை சரளா, ராஷி கன்னா, சிறுவனை மையப்படுத்தி நடக்கும் திகில் நிகழ்வுகள் அலுப்பூட்டுகின்றன. குழந்தைகளுடன் தப்பிக்க நினைக்கும் தமன்னாவின் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. பலம் பெற்ற தீயசக்தியுடன் சுந்தர்.சி சண்டையிடும் காட்சிகள், ‘என்ன கொடுமை சரவணா இது’ ரகம். அம்மன் பாடல், குஷ்பு, சிம்ரனின் நடனம்,

தீயசக்தியை அழிக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் முந்தைய படத்தின் சாயலை நினைவுப்படுத்துகின்றன. ‘காஞ்சனா’ பாதிப்பிலிருந்து கோவை சரளா இன்னும் மீளாமலேயே இருக்கிறார். தமன்னாவுக்காக உருகுவது, ஓர் உயிரைக் காப்பாற்றப் போராடுவது என சுந்தர்.சி, கச்சிதமாக நடித்திருக்கிறார். முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் கொஞ்சமாக வரும் தமன்னா, நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். மருத்துவராக வரும் ராஷி கன்னாவுக்கும், தமன்னாவின் கணவராக வரும் சந்தோஷ் பிரதாப்புக்கும் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

யோகிபாபு, விடிவி கணேஷ், மறைந்த சேஷு, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சிங்கம் புலி என காமெடிப் பட்டாளங்கள் படத்தில் உள்ளன. தீயசக்தியாக வரும் ராமச்சந்திர ராஜூ, ஊர் பெரியவராக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பில் குறையில்லை. கே.எஸ்.ரவிகுமார் ஒரு காட்சியில் தலைகாட்டுகிறார். திகில் படத்துக்குரிய பின்னணி இசையை நிறைவாகச் செய்திருக்கிறார், ஹிப்ஹாப் ஆதி. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் இருட்டுக் காட்சிகள் அழகாகத் தெரிகின்றன. வேகமான காட்சிகளுக்கு ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு உதவியிருக்கிறது. ‘அரண்மனை 4’ அதே டெய்லர், அதே வாடகை, கொஞ்சம் சென்டிமென்ட் தூக்கல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE