ஃபயர் படத்தில் 4 பெண்கள் கதை!

By செய்திப்பிரிவு

தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக் ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜே.எஸ். கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசை அமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி ஜே. சதீஷ்குமார் கூறியதாவது: ‘தங்கமீன்கள்’ படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்க இருந்தேன். இயக்குநர் ராம், மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்தக் கதையை உருவாக்கி, நானே இயக்க முடிவு செய்தேன். இது நான்கு பெண்களைப் பற்றிய கதை. பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விகுறிதான்.

அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. விழிப்புணர்வு படமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இதன் கதையை உருவாக்கி இருக்கிறேன்.

இயக்குநர் ஜீவா வசனம் எழுதியிருக்கிறார். நான், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். அடுத்து வர இருக்கிற சில படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளேன். அந்தப் படங்கள் வந்தால், என் நடிப்பும் பேசப்படும் என நம்புகிறேன். தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது இப்போது தெரியாது. நான் தயாரித்துள்ள ‘அண்டாவ காணோம்’ ஜூன் மாதம் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE