கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’ நாவல் ஆங்கிலத்தில் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவல் ஆங்கிலத்தில் வெளியானது. இரண்டு நிமிட சிறப்பு வீடியோவுடன் இந்நாவல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1920-ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆகோள்’ என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள்.

தற்காலத்தின் மெய்நிகர் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி மற்றும் பெருந்தரவு கொள்ளை ஆகியவைகளைக் களமாகக் கொண்ட நாவலில் நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருங்காமநல்லூர் போராட்டம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில், “ஆகோள் ஒரு படைப்பு அல்ல. ஒரு பயணம். அது தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் செல்வதில் மகிழ்ச்சி. மொழி,தேசம், பண்பாடு தாண்டி அனைவரும் முகம் பார்க்கும் ஒரு படைப்பாக இந்த நாவலைக் கருதுகிறேன். இந்த களத்தில் எழுதுவதற்கு இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்துக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். விரைவில் எழுத்துப்பணிகளைத் தொடங்கவிருக்கிறேன். ரூபா பதிப்பதகத்துக்கும் மொழி பெயர்த்த மீரா ரவிஷங்கருக்கும், மிஸ்டிக்ஸ் ரைட் மொழிபெயர்ப்பு நிறுவனத்துக்கும் என் நன்றி”, என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE