மும்பை: இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக, ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக யாஷும் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கிய நிலையில் ரவீனா டாண்டன், அருண் கோவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன. இந்நிலையில் ராமராகவும் சீதையாகவும் நடிக்கும் ரன்பீர் கபூர், சாய்பல்லவி புகைப்படங்களும் படப்பிடிப்பில் இருந்து கசிந்துள்ளன. அடிக்கடி இப்படி புகைப்படங்கள் கசிவது படக்குழுவுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.