‘கில்லி’யில் விஜய்யின் நடிப்பை மகேஷ்பாபு ரசித்தார்: ‘ஒக்கடு’ இயக்குநர் சிலாகிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘கில்லி’ படத்தில் விஜய்யின் நடிப்பை மகேஷ் பாபு மிகவும் ரசித்ததாக தெலுங்கு இயக்குநர் குணசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்த இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்.

இப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த ஏப்.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் வரவேற்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுவரை மறுவெளியீடு செய்யப்பட்ட படங்களின் வசூலை எல்லாம் ‘கில்லி’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘கில்லி’ குறித்தும் விஜய் குறித்தும் ’ஒக்கடு’ படத்தின் இயக்குநர் குணசேகர் பேட்டி ஒன்றில் சிலாகித்துள்ளார். அதில் பேசிய அவர், “’கில்லி’ படத்தின் விஜய்யின் பாடி லாங்வேஜ், நடிப்பு ஆகியவற்றை மகேஷ்பாபு மிகவும் ரசித்தார். விஜய்க்கு ஏற்றவாறு தரணி மிகவும் புத்திசாலித்தனமாக திரைக்கதையை மாற்றி இருந்தார். எனக்கும் மகேஷ்பாபுவுக்குமான ‘கெமிஸ்ட்ரி’ எப்படி ‘ஒக்கடு’ படத்தில் கைகொடுத்திருந்ததோ அதே போல, விஜய் - தரணி இடையிலான ‘கெமிஸ்ட்ரி’யை கில்லியில் பார்க்க முடியும்” என்று குணசேகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE