சென்னை: கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அறிவியல் புனைக்கதை படம், ‘இன்டர்ஸ்டெல்லர்’. மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. எதிர்காலத்தில் நடப்பது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படம் பல விவாதங்களையும் உருவாக்கியது.
பூமி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலைக்கு ஆளாகிவிட, புதிய கிரகத்தைத் தேடிப் போகும் சாகச விண்வெளிப் பயணம்தான் இந்தப் படத்தின் கதை. நம்பும்படியான திரைக்கதை, நோலனின் நேர்த்தியான இயக்கம் பாராட்டப்பட்டது.
இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆவதை அடுத்து, இதை மீண்டும் வெளியிட இருப்பதாக பாராமவுன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 27-ம் தேதி இந்தப் படம் மீண்டும் வெளியாக இருக்கிறது.