தேர்தல் பிரச்சார பாணியில் ‘ரத்னம்’ பட புரமோஷனில் இறங்கிய இயக்குநர் ஹரி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: இயக்குநர் ஹரியின் ‘ரத்னம்’ திரைப்படம் இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கான புரமோஷனை தேர்தல் பிரச்சார பாணியில் மேற்கொண்டுள்ளார் இயக்குநர் ஹரி.

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி - விஷால் கூட்டணியில் உருவாகும் முன்றாவது படம் ‘ரத்னம்’. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷாலின் 34-வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள இப்படம் வெள்ளிகிழமை (ஏப்.26) திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் புரமோஷனில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் இயக்குநர் ஹரி, புதுச்சேரியில் உள்ள மார்க்கெட்டுக்குச் சென்று, ‘ரத்னம்’ படத்தை திரையரங்குகளில் பாருங்கள் என்று கூறினார்.

பூக்கடைக்கு சென்றவர், அங்கிருக்கும் பெண்மணியிடம், “நான் யாருன்னு தெரியுதாம்மா... நான் தான் இயக்குநர் ஹரி” என சொல்ல, “தெரியும் சார் சொன்னாங்க” என்கிறார் அந்த பெண்மணி. தொடர்ந்து, “ரத்னம் படத்த எடுத்திருக்கிறேன். தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என ஹரி சொல்லியதும், “பாப்போம் சார்” என்கிறார் அந்த பெண்.

அடுத்து, மற்றொரு கடைக்காரரிடம், “கண்டிப்பாக படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என ஹரி கூறியதும், கடைக்காரர், “டிக்கெட் ஏற்பாடு பண்ணி கொடுங்க சார்” என கேட்கிறார். இப்படியாக தேர்தல் பிரச்சாரம் போல மக்களை நேரடியாக சந்தித்து பட புரமோஷனில் ஈடுபட்டுள்ள ஹரியின் இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE