‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

எர்ணாக்குளம்: எர்ணாகுளம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள் மீது மரடு பகுதி காவல்து றையினர் புதன்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.220 கோடியைத் தாண்டி வசூலித்து மிரட்டியுள்ளது. மலையாளத்தின் அதிகபட்ச வசூல் சாதனையை எட்டிப்பிடித்துள்ள இப்படம் இன்றும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படம் வரும் மே 3-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனிடையே, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “நான் இப்படத்துக்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். படத்தின் தயாரிப்பாளர்கள், படம் வெளியான பிறகு, படத்தின் லாபத்தில் இருந்து 40 சதவீத தொகையை பங்காக தருகிறேன் என கூறியிருந்தார்கள். நானும் காத்திருந்தேன். ஆனால், எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. இதன் அடுத்த கட்டமாக தற்போது நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில், மரடு பகுதி போலீசார் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏமாற்றுதல், சதி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE