புதுடெல்லி: பாடகி உஷா உதூப், நடிகர் மிதுன் சகரவர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்.22) நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
மேலும் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
முன்னதாக நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.