மும்பை: மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசும் ‘டீப் ஃபேக்’ வீடியோ பரவி வந்ததைத் தொடர்ந்து, சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங்கின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சமூக வலைதளத்தில் பரவி வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘டீப் ஃபேக்’ வீடியோவுக்கு எதிராக சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை உருவாக்கிய சம்பந்தப்பட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவருக்கான நோக்கம் என்ன, பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெறும்” என்றார்.
இது தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நண்பர்களே டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து எச்சரியாக இருக்கங்கள்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, பாலிவுட் நடிகர் ஆமீர்கான் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பேசும் டீப் ஃபேக் வீடியோ பரவி வருவதாக கூறி, அவரது தரப்பிலும் சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.