‘பசி’ பட இயக்குநர் துரை காலமானார்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘பசி’ படத்தின் இயக்குநர் துரை உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.

கடந்த 1974-ம் ஆண்டு வெளியான ‘அவளும் பெண் தானே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் வெளியான ‘பசி’ திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. மேலும் ஃபிலிம் பேர் விருதும் இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு ‘ஒரு வீடு, ஒரு உலகம்’ படத்துக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. 1982-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி அரசு கவுரவித்தது.

இவரது இயக்கத்தில் வெளியான ‘அவளும் பெண்தானே’, ‘ஆசை 60 நாள்’, ‘பாவத்தின் சம்பளம்’, ‘ஒரு வீடு ஒரு உலகம்’, ‘கிளிஞ்சல்கள்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக இயக்குநர் துரை இன்று காலமானார். 84 வயதான அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பாக கொண்டாடப்படும் ‘பசி’ திரைப்படத்தின் வழியே அவர் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE