சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் ‘அதிகாரம்’ பட கதையில் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். மேலும் அந்த கதையைக் கேட்டு தான் பிரம்மித்துப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வெற்றிமாறன் கூறிய ‘அதிகாரம்’ படத்தின் திரைக்கதையைக் கேட்டு பிரம்மித்துப் போனேன். அவர் எழுதியுள்ள இந்த பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அருமையான கதையை எனக்குக் கொடுத்த வெற்றிமாறனுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் இயக்குநர் குறித்து லாரன்ஸ் அறிவிக்கவில்லை. இருப்பினும், படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்குப் பிறகு கதைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். அடுத்து வெங்கட் மோகன் இயக்கும் ‘ஹன்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து பாக்யராஜ் கண்ணனின் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்கிறார். இதை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் கதையில் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறனை பொறுத்தவரை அவர் ‘விடுதலை 2’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். அடுத்து சூரியின் ‘கருடன்’ படத்துக்கு கதை எழுதியுள்ளார். அடுத்து சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார்.