சென்னை: பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘நிறம் மாறும் உலகில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உட்பட பலர் நடிக்கின்றனர். மல்லிகாஅர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக் ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமாஇன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது. பிரிட்டோ ஜே.பி இயக்குகிறார்.
படம்பற்றி அவர் கூறும்போது, “நடிகனாக வாழ்க்கையை தொடங்கினேன். சில இசை ஆல்பங்கள், விளம்பர படங்களை இயக்கி இருக்கிறேன். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். 4 விதமான வாழ்க்கை, 4 கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளி என படம் இருக்கும். இரண்டு பேர் பேசுவது வழியாக கதை விரியும்படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை, வேளாங்கண்ணி, துவரங்குறிச்சி கிராமம், சென்னை ஹவுஸிங் போர்டு பகுதிகளில் கதை நடக்கிறது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படம் இது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.