சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் கோடிகளில் இருக்கலாம் என படத்தை வெளியிட்ட சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்த இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படத்தின் வசூலால் விஜய்யின் மார்க்கெட்டும் உயர்ந்தது.
இந்நிலையில், இப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 500 திரைகளில் படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று வெளியான இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர். ஆரவாரத்துடன் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன.
இன்றும், நாளையும் நிறைய திரையரங்குகளில் படம் ஹவுஸ்ஃபுல். படத்தை வெளியிட்ட சக்திவேலன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கில்லி முதல்நாள் வசூல் மட்டும் சில கோடிகள் அல்ல… பல கோடிகளை தொட வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவும், பிரகாஷ் ராஜும் படத்தின் மறுவெளியீடு குறித்து புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
» ‘ரோமியோ’வை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க: விஜய் ஆண்டனி
» ‘பிரேமலு’ இரண்டாம் பாகம் 2025-ல் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு