‘ஆடுஜீவிதம்’ நிஜ நாயகன் நஜீப்புக்கு பிருத்விராஜ், ரஹ்மான் நிதியுதவி!

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பிருத்விராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவியதாக ’ஆடுஜீவிதம்’ படத்தின் நிஜ நாயகன் நஜீப் தெரிவித்துள்ளார்.

பிருத்விராஜ், அமலா பால் நடித்து வெளியான பான் இந்தியா படம், ஆடுஜீவிதம். பிளஸ்ஸி இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் சென்று கொத்தடிமையாக மாட்டிக்கொண்ட நஜீப் என்பவரின் உண்மை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்தப் படம் வசூல் குவித்து வரும் நிலையில், கதையின் நிஜ கேரக்டரான நஜீப்புக்கு படக்குழுவினர் பொருளாதார ரீதியாக உதவவில்லை என்று சமூக வலைதளங்களில் பலர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். சிலர் படக்குழுவினரைக் கடுமையாகச் சாடினர். இந்நிலையில், இதில் நடித்த பிருத்விராஜும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தனக்குப் பண உதவி செய்ததாக நஜீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தாங்கள் செய்த உதவிகளை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளால் வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன்” என்றார். முன்னதாக, ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE