நடிகர் ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: தந்தை சிரஞ்சீவி நெகிழ்ச்சி 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாக்டர் பட்டத்தையொட்டி அவரது தந்தை சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 80 தங்கப் பதக்கங்கள் மற்றும் 100 பி எச்.டி பட்டங்களை மாணவர்கள் பெற்றனர். ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.

அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்த கவுரவ டாக்டர் படத்துக்கு திரையுலகிலிருந்து நடிகர் ராம் சரண் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நேற்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல, இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராம் சரண், “இந்த அங்கீகாரத்துக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி. செப்டம்பர் அல்லது அக்டோபரில் 5 மொழிகளில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியாகும்” என்றார்.

முன்னதாக ராம்சரணின் தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகம் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது எனக்கு ஒரு தந்தையாக பெருமையடைய வைக்கிறது. மகன்கள் இப்படியான சாதனைகளை நிகழ்த்தும்போதுதான் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். லவ் யூ மை டியர் டாக்டர் ராம் சரண்” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE