“எனது திருமணத்தை பொது விஷயமாக மாற்ற விரும்பவில்லை” - மனம் திறந்த நடிகை டாப்ஸி 

By செய்திப்பிரிவு

மும்பை: “என்னுடைய திருமணத்தை பொது விஷயமாக மாற்ற விரும்பவில்லை. காரணம், அது எப்படி உள்வாங்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்” என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 23-ம் தேதி நடிகை டாப்ஸி தனது நீண்ட நாள் காதலான மத்யாஸ் போ (Mathias Boe) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வு உதய்பூரில் நடைபெற்றது. இந்த திருமண வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலானது. இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை டாப்ஸி.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொது வெளியில் சொல்ல வேண்டுமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல.

என்னுடைய திருமணத்தை பொது விஷயமாக மாற்ற விரும்பவில்லை. காரணம், அது பொது வெளியில் எப்படி உள்வாங்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன். அதனால் தான் எதையும் பொது வெளியில் அறிவிக்க வேண்டும் என நினைக்கவில்லை.

அதற்கு நான் முதலில் மனதளவில் தயாராகவில்லை என்பது தான் உண்மை. என்னுடன் உண்மையாக நெருக்கமாக இருக்கும் நபர்கள், திருமணத்தில் கலந்துகொண்டனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE