கொச்சி: மலையாள நடிகையான நவ்யா நாயர், தமிழில், அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, மாயக்கண்ணாடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்குச் சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட நவ்யா நாயர், இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.
தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி விற்பனையையும் தொடங்கினார். சில புடவைகளின் விலையை குறிப்பிட்டு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் அவரை இது பேராசை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் இதன் மூலம் கிடைத்த பணத்தை பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு அவர் நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் அவர் வழங்கியுள்ளார்.